முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள் அமாவாசை. இருப்பினும், தமிழ் மாதத்தில் வரக்கூடிய சில அமாவாசை நாட்கள் மிகவும் விஷேசமானது. அந்தவகையில், தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாட்களில் என்ன செய்தால் நல்லது என்று பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
அமாவாசை என்றாலே திதி கொடுக்க உகந்த நாள் அதிலும் தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது அவர்களின் முழு ஆசியும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்தவகையில், தை அமாவாசை நாளில் விரதம் இருந்து அவர்கள் ஆத்ம சாந்திக்காக தர்ப்பண பூஜை செய்ய வேண்டும். தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களின் தாகமும், பசியும் அதிகரிக்குமாம். அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை கொடுப்பதே தர்ப்பணம் ஆகும்.
2023ல் தை அமாவாசை தை 8 ஆம் தேதி (ஜனவரி 21) சனிக்கிழமை வருகிறது. ஜனவரி 21 ஆம் தேதி காலை 06.17 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி ஜனவரி 22 ஆம் தேதி அதிகாலை 02.22 மணிக்கு முடிவடைகிறது. அதனால், ஜனவரி 21 ஆம் தேதி முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
ஒவ்வொரு அமாவாசை நாளும், நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு எள் தண்ணீருக்காக காத்துக் கொண்டு இருப்பார்களாம். எனவே, அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. அதேபோல் அமாவாசை நாளில் யாரையும் கோபமாக பேசவும் கூடாது.
நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் செல்வமும் புண்ணியமும் கிடைக்கும். எனவே, தை அமாவாசை நாள் காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். மேலும், ராகு, எமகண்ட காலத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
தர்ப்பணம் கொடுக்கும்போது குலதெய்வம், கோத்திரம், 3 தலைமுறையின் பெயர்களை கூறவேண்டும். அதேபோல், தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்கும் போது மற்றவர்களிடம் இருந்து கடனாக கருப்பு எள்ளை வாங்கக் கூடாது.
நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதே மாதிரி கரையில் நின்று நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. எனவே, கரையில் இருப்பவர்கள் கரையிலும், நீரில் இருப்பவர்கள் நீரிலும் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அமாவாசை நாட்களில் காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் பித்ருக்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள். எனவே, விரதம் இருப்பவர்கள் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைத்த பின்னரே அவரவர் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம்.
வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ அல்லது துளசி இலையோ சமர்பிப்பது மிகவும் நன்மை தரும். ஏனென்றால், பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்கும் மகாவிஷ்ணுவிற்கு உகந்ததாக துளசி விளங்குகிறது. நாம் துளசி மாலை சாத்தி வழிபடும்போது, மகா விஷ்ணுவை மகிழ்விக்கும்.
பின்னர், முன்னோர்களுக்கு பிடித்த உணவை இலையில் வைத்து படைக்கலாம். அதற்கு முன்னதாக முன்னோர்களின் படத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், அமாவாசை நாளில் முன்னோரை வழிபட்ட பின்னரே தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…