ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக விவசாயிகளுக்கான திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகளின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முக்கிய திட்டங்களை பதிவு செய்து ஆவணப்படுத்தவும், திட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை பார்வையிட்டு கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக நிலம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி தமிழக அரசின் முன்னோடி திட்டங்களில் முக்கிய திட்டமான, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 64 கிராமங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
அனைத்து விவசாயிகளின் விபரங்களை கணக்கெடுப்பு செய்து அவர்களின் பெயர், தொலைபேசி எண், பாத்தியப்பட்ட நிலப்பரப்பு, சர்வே எண், பாசன நீர் ஆதாரம், மின் வசதி, நுண்ணீர் பாசனம், சாகுபடி செய்யும் பயிர்கள் போன்ற விபரங்கள் இதில் உள்ளீடு செய்யப்பட உள்ளன.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நில உரிமை ஆவணங்கள், கிணறு, பண்ணை குட்டை, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்குதல், மின் இணைப்பு பெறுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், கடன் வசதி செய்தல், வேளாண் விளை பொருட்களுக்கு விற்பனை வசதியை ஏற்படுத்தி தருதல் போன்ற சேவைகளும் இந்த செயலி மூலமாக பதிவு செய்யப்பட உள்ளன். இந்த செயலியின் மூலம் அதிகாரிகள் திட்டங்களின் முன்னேற்றங்களை உடனுக்குடன் கண்காணித்து மதிப்பீடு செய்யவும் ஆலோசனை வழங்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…