தமிழகத்தில் காலியாகவுள்ள வனப்பயிற்சியாளர், உதவிப்பிரிவு அலுவலர், கால்நடை உதவி அறுவைசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இடங்களுக்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற விவரத்தை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பதவிகளில் காலியாகவுள்ள 95 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியான நிலையில், அதற்கான முதன்மை தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும், வன பயிற்சியாளர்(10), உதவி பிரிவு அலுவலர்(178), கால்நடை உதவி அறுவைசிகிச்சை நிபுணர்(731 ), மாவட்ட கல்விஅலுவலர்(11 ), உதவி வன பாதுகாவலர்( 9), நூலகர்(27 ), வேளாண் அலுவலர்(121 ) மற்றும் குரூப்-3 பிரிவில் வரும் ஒருங்கிணைந்த சிவில் சேவை துறையில் காலியாகவுள்ள 33 இடங்கள், புள்ளியியல் துறையில் 217 காலிப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 825 சாலை ஆய்வாளர் பணியிடங்கள், 1,083 ஒருங்கிணைந்த பொறியியல் துறை பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், மீன்வளத் துறையில் காலியாகவுள்ள 66 ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் ஜூலை 11, 12-ம் தேதிகளில் நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…