வேலூர்: தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி ஏறுமுகத்திலும், திமுகவின் வளர்ச்சி இறங்குமுகத்தில் இருப்பதாகவும் பாஜக சிறுபான்மையினர் தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலுர் தொகுதியில் பாஜகவை வெற்றி பெறச் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாஜக தேசிய சிறுபான்மையின தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் இப்ராஹிம் பேசியதாவது:
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தமிழக ஆளுநரை அவமதிப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலேயே ஆளுநரை வைத்துக் கொண்டு அவருக்கு எதிராக இழிவாக பேசி, எழுந்து செல்லக்கூடிய ஒரு நிலையை அவர் உருவாக்கினார்.
அதேபோல், தமிழக அமைச்சரவை மாற்ற விஷயத்திலும் ஆளுநரிடம் தவறான தகவலை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார். அதனாலேயே ஆளுநர் அதை நிராகரித்தார். அமைச்சரை மாற்ற வேண்டுமென்றால், ஒரு வழக்கு இருக்கிறது அந்த வழக்கில் வருமான வரித்துறையால் அந்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார், எனவே, அவருக்குப் பதிலாக வேறு அமைச்சரை மாற்றுகிறோம் என்று சொன்னால் அது உண்மையான தகவல்.
ஆனால், அப்படி சொல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் மாற்று அமைச்சரை நியமிக்கிறோம் என்று பொய்யான விஷயத்தை அனுப்பியதால்தான், அதை ஆளுநர் மிஸ்ட்லீடிங், மிஸ் கைடிங், என்று குறிப்பிட்டு, நிராகரித்துள்ளார். உண்மை தகவலைச் சொன்னால், நிச்சயமாக ஆளுநர் பரிசீலித்து தமிழக முதல்வர் யாரை அமைச்சராக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருப்பார்.
ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். சட்டத்தை ஏமாற்றுகிறார். அதனால், இவர் இன்றைக்கு ஆளுநர் இல்லாமல் ஒரு ஆட்சி நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். அரசியல் அமைப்புக்கு எதிராக பிரிவினை வாதத்தை உருவாக்க ஸ்டாலின் நினைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வன்மையாக கண்டனத்தை பதிவு செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வேலூர் இப்ராஹிம், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரைக்கும் நாங்கள் ஒரு ஊழலற்ற கட்சி அதை சொல்வதற்கான நெஞ்சுருதி எங்களுக்கு இருக்கிறது . பிரதமர் தலைமையிலான ஒன்பது ஆண்டுகால ஆட்சியில அவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. மத்திய அமைச்சரவையில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. எந்த நலத்திட்டங்களை ஒதுக்கியதிலும் எந்த குற்றச்சாட்டும் கிடையாது.
25 நாடாளுமன்ற தொகுதிகளை என்.டி.ஏ கூட்டணி வெல்லும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. எங்களுடைய நோக்கம் 39 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்பதுதான். அதில் குறிப்பாக வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்த முறை நிச்சயமாக தாமரை வெல்லும். தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு ஏறுமுகம்தான். திமுகவிற்கு இறங்குமுகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்று தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…