மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டம் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்ட முன்பதிவில்லா ரயில் சேவை வரும் 16 ஆம் தேதி முதல் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி, சேலம், திண்டுக்கல், மதுரை வழியாக போடிநாயக்கனூருக்கு வாரத்தில் மூன்று நாட்கள் விரைவு ரயில் சேவையும் துவங்க உள்ளது. இந்த புதிய ரயில் வழித்தடங்களை மத்திய ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நாளை இரவு போடிநாயக்கனூரில் கொடி அசைத்து துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை வழித்தடத்தில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று ரயில் இன்ஜினை இயக்கி ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்ஜின் மற்றும் இரண்டு ஆய்வுப் பெட்டிகளுடன் காலை 10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட ரயில் 11.15 மணி அளவில் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து மீண்டும் 11:45 மணி அளவில் புறப்பட்டு மதியம் 1.00 மணி அளவில் மதுரை ரயில் சந்திப்பை சென்றடைந்தது.
இந்த சோதனை ஓட்டத்தில் இருப்பு பாதை, சிக்னல் செயல்பாடுகள், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இடை நிறுத்தம் இல்லாமல் நடைபெற்ற இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தால் ரயில்வே பாதையை குறிப்பிட்ட நேரத்தில் கடக்கவோ தண்டவாளம் ஓரம் நிற்கவோ கூடாது என தென்னக ரயில்வே எச்சரிக்கை விடுக்கப்பட்டு முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…