மதுரை மாநகராட்சியில் ஒரே நாளில் 50,000 கொடிகளை விற்று பணத்தை மாநகராட்சியிடம் கட்ட வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அழுத்தம் கொடுப்பதால், மாநகராட்சியின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதாக ஊழியர்கள் புலம்புகின்றனர்.
இந்தியா 75வது சுதந்திர தினத்தை நாளை மறுநாள் கொண்டாடுகிறது. இந்நிலையில், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி சார்பில் ரூ.20 க்கு தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக எந்தவித திட்டமிடலும் இல்லாமல், அவசரகதியில் 2.5 லட்சம் கொடிகள் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் 50,000 கொடிகள் வீதம் 5 மண்டலங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அனைத்து மண்டலங்களிலும், மண்டல அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வீடுகள் தோறும் கொடி விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், மாநகராட்சியின் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பல ஊழியர்கள் வீடுகள் தோறும் கொடி விற்பனை செய்து வருகின்றனர்.
சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் விரைந்து கொடிகளை விற்று தீர்க்க வேண்டும் என்றும், 50,000 கொடிகளை விற்று அதன் பணத்தை இன்றைக்குள் செலுத்த வேண்டும் வேண்டும் என்றும் அழுத்தம் கொடுப்பதால் மனஅழுத்தத்தில் தவிக்கிறார்கள்.
இது தொடர்பாக பேசிய ஊழியர்கள், ''ஏற்கனவே ஆட்பற்றாக்குறையால் பல வேலைகளை ஒருவரே இழுத்து போட்டு செய்கிறோம். இந்நிலையில் இது போன்று கொடி விற்பனை செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்'' என கேள்வி எழுப்புகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…