நம்பி நாராயணன். தேசத் துரோக குற்றம் செய்தவர் என நாடே பேசிய போது மனதுக்குள் என்னவிதமான தவிப்பை கொண்டிருப்பார் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. நாசா அழைத்தும் போகாமல் இந்தியாவுக்காக உலக அளவில் மிகப் பெரிய விசயத்தை செய்து முடித்தவர். இன்றும் கூட அவர் கொண்டாடப்படவில்லை என்பது மிகப் பெரிய வருத்தத்துக்கு உண்டான விசயம்.
தேசத்துக்கு துரோகம் செய்தார் எனக் கூறி சிறையில் அடைபட்டு, சித்திரவதைகளைத் தாங்கி என்ன நிலைமையில் இருந்தார் அந்த மனிதர் என்பதை மாதவன் தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளார். அப்பேர்பட்ட மனிதருக்கு இந்திய தேசம் கொடுத்த விலை என்ன என்பதையும் காட்டி செவிட்டில் அறைந்துள்ளார்.
கமர்ஷியலாக எதுவுமில்லை முழுக்க முழுக்க நம்பி நாராயணனின் வாழ்க்கையை மட்டுமே கூறி ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறார் மாதவன்.
கதைக்களம்
விஞ்ஞானியான நம்பி நாராயணனை நாசா மிகப் பெரிய சம்பளத்துக்கு வேலைக்கு அழைக்கிறது. தனது குருநாதர் விக்ரம் சாராபாயின் கோரிக்கையை ஏற்று அந்த வேலையை ஏற்காமல் இஸ்ரோவில் வேலை செய்யும் தேசப்பற்றாளர் நம்பி நாராயணன்.
திரவ எரிபொருளைக் கொண்டு ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்கிற அற்புதமான விஞ்ஞானத்தை நிரூபித்து காட்டியவர் இவர். நம்பி நாராயணன் கண்டுபிடித்ததுதான் விகாஸ் என்ஜின். இப்படி நாசாவிலோ வேறு நாட்டிலோ கண்டுபிடித்திருந்தால் இந்நேரம் அவர் உலக அறிவியலாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பார். பிறந்தது இந்தியாவிலல்லவா. வேறு என்ன செய்வது. அவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். அவர் மேல் சாட்டப்பட்ட குற்றத்தை தான் செய்யவில்லை என்பதை நிரூபிக்கவே பல போராட்டங்களை அவர் செய்யவேண்டியிருந்தது. என்ன குற்றம், ஏன் இவர் மாட்டிவிடப்பட்டார், அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் கதை.
இயக்கம், வசனங்கள், நடிப்பு என மாதவன் இந்த படத்துடன் அப்படி பொருந்திப்போயுள்ளார். அந்த அளவுக்கு மெனக்கெட்டுள்ளார். கமல்ஹாசன் பக்தன் என தன்னைக் கூறிக் கொள்ளும் மாதவனுக்கு இது சர்வசாதாரணமாக இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நிச்சயமாக இது அவர் இயக்கும் முதல் படம் என்று யாராலும் சொல்லிவிட முடியாது.
முக்கியமாக ஒரு வசனத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஒரு நாயை கொல்ல வேண்டுமென்றால் அதற்கு வெறிநாய் என பெயர் வைத்தால் போதும் என்பது போல மனிதனைக் கொல்ல தேச துரோகி எனும் பட்டம் எனும் வசனம் ஒவ்வொரு சர்வாதிகார அரசையும் சட்டையைப் பிடித்து உலுக்குவது போல இருக்கிறது.
பின்னணி இசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார் சாம் சி எஸ். ஜி வி பிரகாஷ், சந்தோஷ் நாராயணனுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு பின்னி பெடலெடுத்துள்ளார்.
மொத்தத்தில் படம் கண்டிப்பாக திரையில் காண வேண்டிய ஒரு பயோ பிக். நம்பி நாராயணன் எனும் விஞ்ஞானியை சரித்திரத்தில் மீண்டும் இடம்பிடிக்கச் செய்துவிட்டார் மாதவன்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…