ஜாதிய தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அப்பா-மகள் பாசம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளி வந்திருக்கும் படம் 'பொம்மை நாயகி'. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு நாயகனாக நடித்திருக்கிறார். குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீமதி நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார்.
கடலூர் அருகே உள்ள கிராமத்தில் மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார் வேலு(யோகி பாபு). இவர் கடலூரில் ஒரு டீக்கடையில் வேலைபார்த்து வருபவர். மேலும், யோகி பாபுவின் தாய் இரண்டாம் தாரம் என்பதாலும், அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சொந்த அண்ணனாலும், சொந்த ஊர்மக்களாலும் யோகிபாபு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்.
ஊர் திருவிழாவின்போது தனது அண்ணனின் சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் யோகி பாபுவின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். தக்க சமயத்தில் அதை தடுத்துவிடுகிறார் யோகிபாபு. இதை ஊரில் யாரும் தட்டிக் கேட்காத நிலையில், காவல்துறையில் புகாரளிக்க சென்றபோது புகாரை வாங்க மறுக்க, நேரடியாக நீதிமன்றத்திற்கே சென்று புகார் அளிக்கிறார் யோகி. வழக்கு நடந்து குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால், மேல்முறையீட்டில் ஜாமீனில் வெளியில் வரும் அவர்கள் யோகிபாபுவை பழிவாங்க நினைக்கிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை.
இப்படி உணர்வு பூர்வமான கதைகளை பார்க்கும்போது முக்கிய கதாபாத்திரத்தின் மீது நமக்கு அனுதாபம் வரவேண்டும். ஆனால், இப்படத்தில் அந்த உணர்வு ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் போனது. கதாபாத்திரம், கதைக்களத்திற்காக யோசித்த இயக்குநர் அந்த உணர்வுக்காக சற்று யோசித்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல், இடைவேளைக்கு பிறகு பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாததே படத்தில் பெரிய குறை.
குறிப்பாக, நீதிமன்றக் காட்சிகளில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி வசனங்களை எழுதி இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும், யோகி பாபுவின் நடிப்பிற்கு எந்த குறையும் இல்லை. ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்பா கேரக்டரில் யோகி பாபு அருமையாக நடித்திருகிறார். மற்ற நடிகர்களும் தங்களது கேரக்டரில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை அதன் இயல்புடனே காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அதிசயராஜ். காட்சிகளுக்குகேற்ப உணர்வை அதிகமாக்குவதில் கேஎஸ் சுந்திர மூர்த்தியின் பின்னணி இசை கவனம் செலுத்தியிருக்கிறது. படத்தின் கடைசியில் 'பாரத மாதா யார்' என்று இயக்குநர் ஷான் விவரிக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…