சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை பை-பாஸ் அறுவை சிகிக்சை செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 18 மணி நேர சோதனைக்குப் பின்னர் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது, திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், செந்தில்பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வரும் 28ம் தேதி அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்ட நிலையில், அவரது ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் செந்தில்பாலாஜிக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு நாளை ரத்த நாள அடைப்பை நீக்குவதற்கான பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற உயர்நீதிமன்றம் செந்தில்பாலாஜிக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதேநாளில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…