மதிமுக தலைவர் வைகோ ஒரு ரியல் ஹீரோ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மாமனிதன் வைகோ என்ற பெயரில் வைகோ தொடர்பான ஆவணப்படத்தின் வெளியீட்டு விழாவில் முதல்வர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் வைகோவின் அரசியல் வாழ்க்கை குறித்த ஆவண படம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்லாது வைகோவின் மகன் துரை வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திமுக எம்எல்ஏ வேல்முருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”நெருக்கடி காலத்தில் வைகோ அனைவருக்கும் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தியவர். பொடாவில் கைதாகி சிறையில் இருந்தபோதும், வைகோ குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார்.
திமுகவில் இருந்த காலகட்டங்களில் மாணவர் அணியிலிருந்து வைகோவிடம் தேதி கேட்டு நான் கூட்டங்கள் நடாத்தியுள்ளேன். படங்களில் தோன்றும் கதாநாயகன் சித்தரிக்கப்பட்டவன், ஆனால் வைகோ நிஜ ஹீரோ.” என்று அவர் கூறினார்.
மேலும், வைகோவிற்கு பக்கபலமாக எப்போதும் தான் இருப்பேன் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், வைகோவின் உடல் நலம் முக்கியம் என்பதால்தான் அவரை மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை மூலம் எம்பியாக செல்லுங்கள் என்று தான் கூறியதையும் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…