சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் காவேரி தனுயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியின் வசம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவலக்கு துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுனர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், அமைச்சர் ஒருவரை நியமிப்பது ஆளுனரின் தனிப்பட்ட அதிகாரம் எனவும், நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுனர் அனுமதிக்காதது சரியானது என கூறியுள்ளார். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரால் அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது சட்ட விரோதமானது என தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற காவலில் உள்ளவர் அமைச்சரவையில் நீடிக்கலாமா? கூடாதா? என்பது குறித்து எந்த விதமான நீதிமன்ற தீர்ப்புகள் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ள மனுதாரர், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுனரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது எனக் கூறப்பட்டுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற அரசாணையை திரும்பப் பெற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…