தமிழகத்தில் அதிமுகவை ஒழிக்கும் வகையிலேயே பாஜக செயல்படுவதால், அதிமுகவினர் சமூக ஊடகங்களில் பாஜகவை அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் ஏற்பட்ட பல சிக்கல்களை எல்லாம் கடந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிலையான ஆட்சி அமைந்த பிறகு, 2019 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது. இந்த கூட்டணி 2021 சட்டசபைத் தேர்தலிலும் நீடித்த நிலையில், அதிமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியானது.
சுணங்கிய அதிமுக
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது எப்போதுமே சுறுசுறுப்பாக செயல்பட்டு தன்னை மக்கள் மத்தியில் பேசுபொருளாகவே வைத்திருக்கும். ஆனால் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது எப்போதுமே பெரிய அளவில் செயல்படாது என்ற கருத்து ஜெயலலிதா காலத்தில் நிலவியது. தற்போதும் அதிமுக அதேபோல் பல முக்கிய பிரச்சினைகளிலும் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
எழுச்சி பெறும் பாஜக
இந்நிலையில் தமிழகத்தில் கட்சியை எப்படியும் வளர்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள மத்திய பாஜக தலைமை, கட்சியில் பல சீனியர்கள் இருந்த நிலையில் அவர்கள் யாரையும் தேர்ந்தெடுக்காமல் அண்ணாமலையை தலைவராக்கியது.
அண்ணாமலை வந்த பிறகு பாஜக தொடர்ந்து பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்காக ஆளும் திமுக அரசை எதிர்த்து வருகிறது. மேலும் தமிழக அமைச்சர்களும் அண்ணாமலைக்கு தொடர்ந்து பதிலளித்து அண்ணாமலையை எதிர்கட்சித் தலைவர் போல் கட்டமைத்து வரும் நிலையில், அண்ணாமலையின் செல்வாக்கும் பாஜகவின் செல்வாக்கும் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.
பொன்னையன் எச்சரிக்கை
பாஜகவின் வளர்ச்சி என்பது அதிமுகவின் வீழ்ச்சியாகத்தான் இருக்கும் என்பதை சரியாக உணர்ந்துள்ள அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் உரையாற்றியபோது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக வளர நினைக்கிறது என்பதை வெளிப்படையாக பேசிய பொன்னையன், அதிமுகவினர் பாஜக விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் பாஜகவை அமபலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரத்தில் தமிழக பாஜக குரல் எழுப்பாததை மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் அம்பலப்படுத்துமாறு பொன்னையன் கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…