சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மாநிலத்தின் அமைச்சர் அவர் தீவிரவாதி கிடையாது. அமலாக்க துறையினர் 20 மணி நேரத்திற்கும் மேல் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளனர் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருமானவரித்துறையினரோ, அமலாக்க துறையினரோ, மத்திய புலனாய்வுத் துறையினரோ சந்தேகத்தின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு யாரை வேண்டுமானாலும் விசாரணை மற்றும் சோதனை செய்யலாம், அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் நேற்றைய சம்பவம் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்று உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை சார்பில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அமைச்சர் நான் முழு ஒத்துழைப்பு தருகிறேன், வருமான வரித்துறை கேள்விக்கு விளக்கம் தருகிறேன் என கூறினார்.
அவர் ஒரு மாநிலத்தின் அமைச்சர் தீவிரவாதி கிடையாது. அமலாக்க துறையினர் 20 மணி நேரத்திற்கும் மேல் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளனர். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். சோதனை செய்வதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்தையும் செய்ய வேண்டும்.
புகார் கொடுத்தது அதிமுக ஆட்சிக் நடைபெற்ற ஊழலுக்காக, இதேபோன்று மற்ற அதிமுக அமைச்சர்கள் மீதும் புகார்கள் விசாரணை நடைபெற்று உள்ளது. ஆனால் இதுபோன்று இரவு நேரங்களில் கைது செய்யப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை 20 மணி நேரம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி தரதரவென்று அவரை இழுத்து உள்ளனர். இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இது பாஜக ஆளாத மாநில அரசுகளை மிரட்டும் செயல் ஒடுக்கும் செயலாகும். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற பிரச்சனையோ, கர்நாடகா காங்கிரஸ் சிவகுமாருக்கு நடைபெற்ற பிரச்சனையோ, டெல்லி ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சிசோடியாவுக்கு நடந்த பிரச்சனையோ, இது அனைத்தும் பாஜக ஒன்றிய அரசு மாநில அரசை மிரட்டும் ஒடுக்கும் செயலாகும்.
மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமலாக்க துறையினர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அங்கு சோதனை செய்தது கண்டிக்கிறோம் இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என நாங்கள் பார்க்கிறோம். முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் விசாரணைக்கு பிறகு தான் அது முக்கியமானதா இல்லையா என்பது தெரியவரும் அவர்கள் கூறியதை நாம் உண்மை என்று கூற விட முடியாது.
அவரை கைது செய்து தற்போது அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை எதையுமே அமலாக்க துறையினர் அமைச்சர் உறவினரிடம் தெரிவிக்கவில்லை. இ எஸ் ஐ மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனை சேர்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவருக்கு அடைப்பு உள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…