பாஜக சார்பில் நடைபெறும் பாத யாத்திரையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநிலம் முழுவதும் பாத யாத்திரைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயணமானது ஜூலை 3-வது வாரத்தில் இருந்து தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இந்தப் பயணத்தின்போது, திமுகவின் 2வது ஊழல் பட்டியலை வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அண்ணாமலை நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடத்தப்படவுள்ள பாத யாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் தமிழகம் வருகை தரவுள்ளார். ஜூலை 2-வது வாரத்தில் கட்சி சார்பில் நான் மீண்டும் 4 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். அந்த பயணத்தை முடித்து திரும்பியதும், ஜூலை 3-வது வாரத்தில் எனது பாத யாத்திரை பயணம் தொடங்கப்படும். இந்தப் பாத யாத்திரைக்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
வேலூரில் அண்மையில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமானநிலையம் வந்தடைந்தபோது, அங்கு மின்தடை ஏற்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் விளக்கமளிக்கக் கோரி உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…