Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தில்பாலாஜி மீதான பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு - திமுக, கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்பால் பின் வாங்கினாரா ஆளுநர்..?

Saraswathi Updated:
செந்தில்பாலாஜி மீதான பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு - திமுக, கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்பால் பின் வாங்கினாரா ஆளுநர்..? Representative Image.

அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிவிப்பை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த செந்தில்பாலாஜி, கடந்த 14ம் தேதி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், தற்போது தனியார் மருத்துவமனையில் பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வருகிறார்.

இதைத் தொடர்ந்து, அவர் வகித்துவந்த துறைகளில், இரு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்புத் தெரிவித்து, அதற்கு ஒப்புதல் அளிக்கவும் மறுத்துவிட்டார். இதையடுத்துதமிழக அரசு அரசாணை வெளியிட்டு, செந்தில்பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என அறிவித்தது. 

செந்தில்பாலாஜி மீதான பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு - திமுக, கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்பால் பின் வாங்கினாரா ஆளுநர்..? Representative Image

இந்நிலையில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார். அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால், அமைச்சராக அவர் நீடிப்பதால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த உத்தரவில் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

ஆளுநர் நடவடிக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதேநேரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு பாஜக மற்றும் அதிமுக வரவேற்பு தெரிவித்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்க ஆளுநர் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த பதவி நீக்க உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தகவல் தெரிவித்துள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்