1991 ஆம் ஆண்டு மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நான்கு பேரின் கருணை மனு மீது ஜனாதிபதி எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. பின்னர் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கால், கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரும் தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி விடுதலை செய்து உத்திரவிட்டது.
விடுதலையான ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேரும் ஈழத் தமிழர்கள் என்பதால், அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 6 பேர் விடுதலை சம்பந்தமான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய பாஜக அரசு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…