போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தள்ளார். அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்கு முன்பே செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் 2 மாதங்களுக்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் அனுமதி பெறாத டாஸ்மாக் பார்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் முதலமைச்சர் குடும்பத்திற்கு பல கோடி ரூபாய் சென்றுள்ளது. சட்டவிரோத பார்கள் மூலம் முறைகேடாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெறப்படுகிறது.
தங்களை காட்டிக் கொடுத்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்துள்ளார். உண்மையான அக்கறையில் அவர் சந்திக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…