ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 12ம் தேதி அமைதிப் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ராகுல்காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறைதண்டனைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், அனைத்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை தனித்தனியே எழுதியுள்ளார். அதில், மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், ராகுல்காந்தி தனியாக இல்லை என்றும், உண்மை, நீதிக்கான போராட்டத்தில் அவருடன் கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கோடிக்காண மக்களும் அவருடன் உள்ளார் என்பதை மீண்டும் வலியுறுத்த நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவித்தும், அவதூறு வழக்கில் நீதி கிடைக்கக் கோரியும் வரும் 12ம் தேதி அனைத்து மாநிலத் தலைமையகங்களிலும், மகாத்மா காந்தி சிலையின் முன்பு ஒரு நாள் அமைதிப் போராட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் அந்தக் கடிதத்தில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்த அமைதிப் போராட்டத்தில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமெனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…