கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதிசீனிவாசன், திமுக பிரதிநிதிகள் மற்றும் திமுவைச் சேர்ந்த பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கோவை வி.கே.மேனன் சாலையில் பாஜக சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏவான வானதிசீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, திமுகவைச்சேர்ந்த பெண்கள் மற்றும் நிர்வாகிகளை தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம், அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பொதுவெளியில் திமுகவினரை தவறாக சித்தரிக்கும் நோக்கோடு அவதூறாகப் பேசிய வானதிசீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர் மணிமாலா உள்ளிட்டோரும், வானதி சீனிவாசனின் அவதூறு பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மகாலிங்கபுரத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பாஜக பெண் எம்.எல்.ஏமீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் அளித்துள்ள புகாரால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…