கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு பரவலால், கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழையால், கேரளாவில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் அதிகமாகப் பரவிவருகின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, கேரள எல்லை மாவட்டமான கோவையிலும் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த மாதம் வரை 28 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதையடுத்து, டெங்கு பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைள் கோவை மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டப் பகுதிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருவதாகவும், காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையிலும், மக்கள் பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்க வேண்டுமென கோவை மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…