தமிழகத்தில் ஆமை வேகத்தில் சென்றுகொண்டிருந்த பாஜகவை புயல் வேகத்தில் வளர்த்து வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் தமிழக முதல்வராவார் என தமிழ் திரையுலகில் நடிகர் விஜயை வைத்து ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சிவன்கனை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் பேரரசு ஊர் பெயர்களில் படங்களை எடுத்து பிரபலமானவர். சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, தருமபுரி என ஊர் பெயர்களில் பல படங்களை எடுத்தாலும், அவருக்கு ஹிட் கொடுத்தது என்னவோ விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி மற்றும் சிவகாசி மட்டும் தான்.
கடைசியாக அவர் இயக்கிய படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த பேரரசு, பின்னர் நடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேரரசு, “திமுகவில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற மிகத் திறமையான பேச்சாளர்கள் இருந்தனர். அதேபோல் அதிமுகவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்த தலைவராக இருந்தார். ஆனால் பாஜகவில் அப்படி யாரும் இல்லை. மேலும் எம்ஜிஆர் போல் மக்களை வசீகரிக்கும் முகங்களும் இல்லை.
இந்த நிலையில் தான் பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றார். அண்ணாமலை பாஜகவின் இந்த பிரச்சினைகளை களைந்து மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைவர்களில் ஒருவராக ஆகிவிட்டார். இவர் எங்கு சென்றாலும் தமிழக மக்கள் அனைவரும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர். எனவே அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் வெற்றி பெற்று தமிழக முதல்வராவார்.” என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் பேரரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் காமராஜரோடு அண்ணாமலையை ஒப்பிட்டு பேசிய நிலையில், தற்போது பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் வரிசையில் மக்கள் மனதை வென்ற தலைவர் எனக் கூறியிருப்பதோடு நிச்சயம் முதல்வராவார் எனக் கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…