திமுக நிர்வாகி ஒருவர், இந்து முன்னணி கட்சியின் கொடியை அசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை துவக்கி வைக்கும் புகைப்படக் காட்சிகள் வெளியாகியுள்ளது திமுகவினரிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுளது.
வழக்கமாக முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதில்லை என்றாலும், இந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதை தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் விமர்சிக்கவும் செய்திருந்தார்.
இந்த நிலையில் தான் திமுக நிர்வாகி ஒருவரே, இந்து முன்னணி கொடியைப் பிடித்து அசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அரங்கேறியுள்ளது.
வாணியம்பாடியில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஊர்வலத்தை அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார், நகர கூட்டுறவு வங்கி தலைவரும், திமுக நகர செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர்.
திமுக நிர்வாகி சாரதி குமார், இந்து முன்னணியின் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்றதோடு, இந்து முன்னணி அமைப்பின் கொடியையும் அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தது உள்ளூர் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்களை சாரதிகுமார் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
திமுக நகர செயலாளர் சாரதி குமார், திமுக பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. கதிர் ஆனந்திடமும் இந்த விவகாரம் செல்ல அவர் சாரதி குமாரை அழைத்து விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைமைக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி புகைப்பட ஆதாரத்துடன் உள்ளூர் திமுகவினர் புகார் அனுப்பியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…