சென்னை: திமுக ஊழல் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்ன கருத்தை வரவேற்பதாகவும், திமுக இந்த வாரம் சிறைக்குச் செல்லும் வாரம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் இலாக இல்லாத அமைச்சர் பொறுப்பில் வைத்திருக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி கைதுக்கு முதல்வர் ஏன் இவ்வளவு பதட்டமைடய வேண்டும். செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுகவினர் பாதிபேர் சிறைக்குச் செல்வது உறுதி.
ஆளுநர் விரைவில் டெல்லிக்கு செல்ல உள்ளதால், விரைவில் திமுக அரசு கலைக்கப்படும். அந்த செய்தி தான் தமிழக மக்களுக்கு தீபாவளி என்றும், ஏற்கனவே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட திமுக ஆட்சி, மீண்டும் அதே காரணத்திற்காக கலைக்கப்படவுள்ளது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக அரசை ஊழல் கட்சி என்று சொன்னதை நான் வரவேற்கிறேன். எப்போதும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என்றும், சீட் நாங்கள் தான் மற்றக் கட்சிகளுக்கு ஒதுக்குவோம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக இந்த வாரம் சிறைக்கு செல்லும் வாரம். அமலாக்கத்துறையால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்ய 500 மதுக்கடைகளை மூடுவதாக திமுக அரசு அறிவித்துள்ளது என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…