திமுக அரசைப் பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தலைநகரம் கொலை நகரமாகும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி நிறுவனரான சி.பா. ஆதித்தனாரின் 41வது நினைவு நாளையொட்டி சென்னை எக்மோரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தான் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட வாய்ப்புள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுபடுவேன் என்று தெரிவித்தார்.
மேலும் திமுக போல சர்வாதிகார ஆட்சி மற்றும் சர்வாதிகார தலைவர் அதிமுகவில் இல்லை என்று கூறிய அவர், பத்திரிகைகள் மீது தொடுக்கப்படும் ஜனநாயக தாக்குதலே சமீபத்திய வழக்கு பதிவு என்றதோடு, கருத்து சுதந்திரம் குறித்து எதிர்கட்சியாக இருந்த போது வாய் கிழிய பேசியவர் தான் மு.க.ஸ்டாலின் என்று காரசாரமாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜூனியர் விகடன் மீது மட்டுமல்ல இனி யார் மீது வேண்டுமானலும் வழக்கு தொடரப்படும் என்றும் இது அனைவருக்குமான அச்சுறுத்தல் தான் என்றும் தெரிவித்தார். தமிழக அரசை பற்றி பேசினாலே ஜெயில் தான் என்ற ஜனநாயக விரோத ஆட்சி தான் தற்போது நடப்பதாகவும், காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி தமிழகத்தை தலை குனிய வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…