திமுக ஆட்சிக்கு எதிராக பேசினால், எழுதினால் குண்டாஸ் என்றால் அது எப்படி சட்டம் ஒழுங்காக இருக்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனரான சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டி, சென்னை எக்மோரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் திமுக ஆட்சி குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான், "பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யும் வகையில்தான் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு உள்ளது. இதில் என்ன சட்டம் - ஒழுங்கு இருக்கிறது? அரசை விமர்சித்து பேசுவதற்கெல்லாம் வழக்கு பதிந்து சிறையில் அடைப்பதெல்லாம் அதிகார அத்துமீறல்.
ஒரு கருத்துக்கு மாற்று கருத்தைத்தான் பதிவிட வேண்டுமே தவிர, உடனடியாக சிறைபடுத்தி, குண்டர் சட்டம் பதிவு செய்யப்படுகிறது. பேசினால், எழுதினால், குண்டாஸ் என்றால், சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது எப்படி சட்டம் - ஒழுங்காக இருக்க முடியும்?
பத்திரிகைகளில் எழுதுவதை ஏதோ அரசின் நற்பெயரை கெடுப்பதாக கூறுகிறார்கள். அரசு செய்யும் செயலில் கெடாதது, செய்தியாக வரும்போது மட்டும் தன கெட்டுவிடுமா? செய்தி வராமல் செயலை மாற்றிக் கொண்டால், செய்தியே வராது.
அதிகாரத்தில் இருக்கும்போது, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அதிகாரம், ஆட்சியாளர்கள் என்று பேசுவதை எப்படி மக்களாட்சி என்று எடுத்துக்கொள்வது, எப்படி ஜனநாயகம் என்று எடுத்துக்கொள்வது? ஒரே ஒரு கருத்து, அதை யாரும் எதிர்க்கக்கூடாது என்று கூறுவது ஜனநாயகமா இல்லை கொடுங்கோன்மையா?” என்று கேள்வியெழுப்பினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…