தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்க கவர்னர் ஆர்.என்.ரவி முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்ல்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை என்பதால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி கொல்லைப்புறமாக, ஆட்சிக்கு வரத்துடிப்பதாக தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் தான் நாடு ஜனநாயக நாடாக இருக்கும் என்று தெரிவித்த முத்தரசன், பிரதமர் மோடி படிப்படியாக அரசியலமைப்பு சட்டங்களை தகர்த்து எதேச்சதிகாரமாக செயல்படுவதாக கூறினார். ஹிட்லர், கோயபல்ஸ் போல, மோடி, அமித்ஷா கூட்டணி மிக மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக கூறிய அவர், ஆளுநர்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். சிபிஐ, வருமானவரித்துறை எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டும் தான் னடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய முத்தரசன், அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என சொன்ன பிறகும் கொலை குற்றவாளி போல நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.
தலைமை செயலருக்கு கூடத்தெரியாமல் திறந்த வீட்டில் நாய் புகுந்த மாதிரி, தலைமைச் செயலகத்திலேயே சோதனை நடத்தியிருப்பது இது ஜனநாயக நாடு தானா என்ற கேள்வியை எழுப்புகிறது என்றும் அவர் கூறினார். அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டுமென முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் தான் என்று குறிப்பிட்ட முத்தரசன், முதலமைச்சர் பரிந்துரை செய்பவர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே தவிர, அமைச்சர்களை தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்றும் கூறினார். மேலும், ஆளுநர்களுக்கு தனி அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த பிறகும் அடாவடித்தனமாக அரசியல் நெருக்கடிகளை உருவாக்க வேண்டுமென ஆளுநர் செயல்படுவதாகக்கூறிய முத்தரசன், மாநில அரசிற்கு எதிராக ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்துவதாக குற்றம்சாட்டினார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முத்தரசன், கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால், குடியரசுத்தலைவரை வரவிடாமல் தடுத்தது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…