அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது நலமுடன் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லங்கள், தலைமைச்செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அமைச்சரிடம் பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று நள்ளிரவு விசாரணைக்காக அழைத்துச் செல்ல முற்பட்டபோது, அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
நெஞ்சுவலிப்பதாகக் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி திடீரென மயக்கமடைந்ததால், அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சரைச் சந்திக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் யாருக்கும் முதலில் அனுமதி அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோர் அவரை நேரில் சென்று பார்த்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் செந்தில்பாலாஜி சுயநினைவின்றி இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் அவர் இருப்தபாகவும் கூறினார். மேலும், அமலாக்கத்துறை விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டு இருக்கிறார் என்றும் அமைச்சரின் காதுப் பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்த்துவிட்டுத் திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருப்பதாகவும், மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கும், உருட்டல் மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…