அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழில்நுட்பத்துறையில் இந்தியா தான் மற்ற நாடுகளுக்கு தலைமையாக இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் தென்னிந்திய தொழில் வர்த்தக சபையின் 113வது கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பயணம் என்றார். இந்த பயணம் தொழில்நுட்பத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது நடைபெற்ற இரவு விருந்தில் சுந்தர் பிச்சை கலந்துகொண்டதாகவும், அப்போது, பிரமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தை சுந்தர் பிச்சை பாராட்டி பேசியதாகவும் ராஜீவ் சந்திரசேர் குறிப்பிட்டார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிக் கூக், பிரதமர் மோடியை சந்தித்தப்போது, இந்தியா தான் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்ய ஏதுவான சூழலை ஏற்படுத்தி கொடுத்ததாக கூறியதை அவர் நினைவுப்படுத்தினார். அதனால்தான் தங்கள் நிறுவனத்தின் பொருட்களை வேகமாக உற்பத்தி செய்ய முடிவதாக டிக் கூக் கூறியதை ராஜீவ் சுட்டிக்காட்டினார். 2014 ஆம் ஆண்டு வரை நாட்டுமக்கள் பயன்படுத்திய செல்போன்களில் 85 விழுக்காடு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது, 99.7 விழுக்காடு செல்போன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஒருகாலத்தில் மின்னணு பொருட்களை வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டிய சூழலில் இருந்த இந்தியா, கடந்தாண்டில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மத்தியில் பாஜக பொறுப்பேற்றது முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், தற்போது, தொழில்நுட்பத்துறையில் இந்தியர்கள் இல்லாத பிரிவே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளதாகவும் ராஜீவ் சந்திரசேகர் பேசினார். வரும் பத்து ஆண்டுகளுக்கு மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறையில் இந்தியா தான் மற்ற நாடுகளுக்உ தலைவராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…