சென்னை: தலைமைச் செயலகத்தில் புகுந்து அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தியதற்கு கார்கே, மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லம் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக மீதான பாஜகவின் அரசியல் பழிவாங்கலை கண்டிக்கிறேன். விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்கிறது. தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவை பாஜகவின் பழிவாங்கும் செயல்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் அலுவலக சோதனையில் அமலாக்கத்துறையை அப்பட்டமான துஷ்பிரயோகமாக பயன்படுத்தியதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது.
துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றை செய்யும் மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சிகள் இவை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமான துஷ்பிரயோகம் மோடி அரசாங்கத்தின் அடையாளமாகும்.இந்த உத்திகளின் மூலம் எதிர்கட்சிகளின் வாயை அடைப்பதில் வெற்றியடையாது. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும் உறுதியை இன்னும் வலுப்படுத்தவே செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான ரெய்டுகளுக்கு கடும் கண்டனம் என பதிவிட்டுள்ளார். இவர்களை போல் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…