தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பதவி வகித்துவந்த சைலேந்திரபாபு கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வுபெற்றார். அவரைத் தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர்ஜுவால் பதவியேற்றார். இதேபோல், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி, மாநகர காவல்துறை ஆணையர், ஆவடி காவல் ஆணையர் ஆகியோரும் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா, உள்துறை செயலாளர் அமுதா, சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர்ஜுவால், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், மாநகர காவல்துறை ஆணையர்கள், சரக ஐ.ஜி.கள், டிஐஜிகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சொத்து பிரச்சனை தொடர்பாக குற்றங்கள், குடும்ப வன்முறை, பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், காவல்துறையினரின் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…