Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்திய அரசியலமைப்புக்கு விரோதமானது.. நீதித்துறையில் கைவைக்கும் மத்திய அரசு?

Sekar Updated:
இந்திய அரசியலமைப்புக்கு விரோதமானது.. நீதித்துறையில் கைவைக்கும் மத்திய அரசு?Representative Image.

கொலிஜியம் அமைப்பு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் வழிமுறை குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தாக்குதலைத் தொடுத்தார்.

இது தொடர்பாக நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும், குறிப்பாக அரசாங்கத்திற்கு ஒரு மத ஆவணம் என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், சுப்ரீம் கோர்ட் தனது அறிவுரைப்படி, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கொலீஜியத்தை உருவாக்கியது. 1991க்கு முன்பு அனைத்து நீதிபதிகளும் அரசாங்கத்தால் தான் நியமிக்கப்பட்டார்கள் என்று அவர் கூறினார். 

"நீதிமன்றங்கள் அல்லது சில நீதிபதிகள் எடுக்கும் முடிவால் அரசியலமைப்பிற்குப் புறம்பானது எதுவாக இருந்தாலும், அந்த முடிவை நாடு ஆதரிக்கும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்." என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கொலிஜியம் அமைப்பு நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு அந்நியமானது என்று கூறிய ரிஜிஜு, கொலீஜியம் அமைப்பு எந்த விதியின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது என்பதை நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டார்.

உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை அனுப்பியவுடன், அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று சட்ட அமைச்சர் விளக்கினார். நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்து கிடக்கும் நேரத்தில், பல்வேறு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைகள் மீது அரசு மெத்தனமாக இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ரிஜிஜு இதை கூறினார்.

ஆனால் அதே நேரத்தில், 1991 ஆம் ஆண்டின் அன்றைய அரசாங்கமும், தற்போதைய ஆட்சியும் கொலிஜியம் அமைப்பை ஒரு சிறந்த அமைப்பால் மாற்றும் வரை அதை மிகவும் மதிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

அந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தில் தான் ஈடுபட மாட்டேன் என்று கூறிய அவர், அதற்கு ஒரு சிறந்த தளம் அல்லது சிறந்த சூழ்நிலை தேவை என்கிறார்.

கொலிஜியம் முறையை ரத்து செய்ய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) சட்டத்தை பாராளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது. ஆனால் அந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கொலீஜியம் முறை நடைமுறையில் இருக்கும் வரை அந்த அமைப்பை மதிக்க வேண்டும் என்றார் ரிஜிஜு.

"ஆனால், கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டதால் அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அரசாங்கத்தின் பங்கு என்ன? உரிய கவனம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?" என்று அவர் வாதிட்டார்.

கொலீஜியம் அமைப்பில் ஓட்டைகள் இருப்பதாகவும், அந்த அமைப்பு வெளிப்படையானது அல்ல என்று மக்கள் குரல் எழுப்பி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் உங்களுக்கு பொறுப்புக்கூறல் என்பதே இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

சமீபத்தில் தேர்தல் ஆணைய நியமனத்தில் கொலிஜியம் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வு கூறிய கருத்துக்கள் மத்திய அரசை கோபப்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்வினையாக இது வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நீதித்துறையில் உள்ள கொலிஜியம் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ள நிலையில், அதற்கான ஆரம்பப் புள்ளியாக சட்ட அமைச்சரின் பேச்சு இருப்பதாகவும் ஒரு சாரார் கூறுகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்