அரசியலில் தங்களுக்கு இடையே எத்தனையோ சலசலப்ப்பு இருந்தாலும், சில உயர்மட்ட அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட நாகரீகத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். உதாரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடியின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கூறுவதில் பெயர்போனவர். ஆனால், மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள்.
நட்பை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் விளையும் அதிக ருசிக்கொண்ட மாம்பழ வகைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக மாம்பழம் அனுப்புவதை மம்தா பானர்ஜி மறக்காமல் செய்து வருகிறார். அந்தவகையில், இந்தாண்டும் அவர் நேற்று பிரதமர் மோடிக்கு மாம்பழத்தை பரிசாக அனுப்பி வைத்தார்.
"மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்த்துகள்" என்ற வாசகங்களுடன் பழங்களின் அரசனான மாம்பழ வகைகளில் வெகு நேர்த்தியாகத் தேர்வு செய்யப்பட்ட அதி சுவையான 3 மாம்பழ வகைகள் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட 4 கிலோ எடையுள்ள பெட்டியானது கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது. அனுப்புபவர் முகவரியில் மம்தா பானர்ஜி , மேற்கு வங்காள முதல்-மந்திரி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பிரதமர் மோடிக்கு அனுப்பியது போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழ பெட்டிகளை பரிசாக அனுப்பி உள்ளார்.
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றி கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அடுத்த நாளே மாம்பழம் பரிசு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்த தேசிய கனி மத்திய-மாநில உறவில் ஏதேனும் இனிப்பான தருணத்தை ஏற்படுத்தமா? என்பதை குறிப்பிடுவது போன்று தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…