அதிமுக எதிர்காலத்திலும் தமிழகத்தின் வலுவான அரசியல் சக்தியாக செயல்பட ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படுவது அவசியம் என்ற கருத்தாக்கம் தற்போது கட்சியையே உடைத்துவிடுமோ என நினைக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சிலகாலம் கட்சி அமைதியிழந்து தவித்தது. எனினும் சசிகலா சிறை சென்ற பிறகு, அதிமுகவில் அனைத்து மோதல்களும் முடிவுக்கு வந்து அமைதி திரும்பியது. கட்சிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் எனும் இரட்டைத் தலைமை பார்முலாவுடன், எடப்பாடி பழனிச்சாமியும் முதல்வராக 4 ஆண்டுகளை எந்தவித சிக்கலும் இல்லாமல் முடித்தார்.
எனினும் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் மீண்டும் நீறுபூத்த நெருப்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது இந்த மோதல் உச்சகட்டமடைந்து இரு தரப்பின் ஆதரவாளர்களும் தங்களுக்குள் மோதி வருகின்றனர். கட்சியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமை வந்தால் மட்டுமே கட்சியை நிலைநிறுத்த முடியும் என்றும், அந்த ஒற்றைத் தலைமையாக தானே இருக்க வேண்டும் என இபிஎஸ்ஸும் விரும்புவதாகத் தெரிகிறது.
ஆனால் ஜெயலலிதா காலத்தில் நெ.2 ஆக இருந்த ஓபிஎஸ், கடைசி வரை நெ.2 ஆகவே இருப்பதை விரும்பவில்லை எனவும், இதனால் இபிஎஸ்ஸின் ஒற்றைத் தலைமை பார்முலாவுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த மோதலால் கட்சியே உடையும் நிலையில் உள்ளது.
இந்த மோதல் தற்போது தொண்டர்கள் வரை பரவியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில், அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அடங்கிய வாட்சப் குழுக்களில், இதுகுறித்த காரசார விவாதம் நடப்பதாகத் தெரிகிறது.
இருதரப்பு ஆதரவாளர்களும், தங்கள் தலைவரே ஒற்றைத் தலைவராக வர வேண்டுமென, பகிரங்கமாக குரல் கொடுப்பதோடு பரஸ்பரம் எதிர்தரப்பு மீது மீம்ஸ் போர் நடத்தி வருவதால் அதில் உள்ள நடுநிலையாளர்கள் செய்வதறியாது திகைத்து வருவதாக கூறப்படுகிறது.
இதேபோன்ற நிலைமை தான் அனைத்து மாவட்டங்களிலும் நிலவுவதாக கூறப்படும் நிலையில், இபிஎஸ் ஒற்றைத் தலைமையாக உருவாவதை தடுக்க முடியாவிட்டால், ஓபிஎஸ் மீண்டும் தர்மயுத்தத்திற்கு அறைகூவல் விடும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே இந்த விவகாரத்தை நெருக்கமாக கண்காணித்து வரும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…