பாரதிய ஜனதா கட்சி வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கான தனது கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வியின் பெயர் இதிலும் இடம்பெறவில்லை.
முக்தர் அப்பாஸ் நக்வி 2016இல் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது ராஜ்யசபா பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி முடிவடைகிறது. வழக்கமாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவி முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், முக்தர் அப்பாஸ் வெளியேறினால் யார் அடுத்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யார் அடுத்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர்?
பாஜக சார்பில் மக்களவையில் ஒரு முஸ்லீம் எம்பி கூட இல்லாத நிலையில், மாநிலங்களவையில் முக்தர் அப்பாஸ் நக்வி மட்டுமல்லாது சையத் ஜாபர் இஸ்லாம், மற்றும் எம்.ஜே.அக்பர் ஆகியோர் உள்ளனர். ஆனால் நக்வியைப் போலவே, ஜாபர் இஸ்லாம் ஜூலை 4 ஆம் தேதியும், அக்பர் ஜூன் 29ஆம் தேதியும் தங்கள் பதவிக்காலத்தை முடிக்க உள்ளனர்.
இதனால் பாஜகவில் முஸ்லீம் எம்பிக்களே பாராளுமன்றத்தில் இல்லாத நிலை ஏற்படும். அதே சமயம் பாஜக தலைமையில் இயங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி பார்ட்டியின் மெஹபூப் அலி கைசர் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு வழங்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
எனினும், இந்திய அரசியமலமைப்புச் சட்டத்தின் படி, முஸ்லீம்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின் மற்றும் பார்சிக்களும் சிறுபான்மையினர் தான் என்பதால், வழக்கமாக முஸ்லீம் சமூகத்துக்கு மட்டுமே வழங்குவதை மாற்றி, இந்த முறை இதர சிறுபான்மை சமூகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு பாஜக வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…