நெல்லை:மகாராஷ்டிராவில் அசிங்கமான அரசியலை மோடி செய்து வருகிறார் என்றும், அவரின் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிவிட்டது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் நெல்லை டவுன் லட்சுமி மஹால் வைத்து திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா, வெற்றி கொண்டான் உள்ளிட்ட திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு ரூபாய் 5000 பொற்கிழி மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வழங்கி கௌரவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஓராண்டு கொண்டாட தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி இருந்தார்.
அதன்படி நெல்லை மாநகர திமுக சார்பில் 100 திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியுடன் கலைஞர் சிலையும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொற்கிழி வழங்கும் திட்டம் தொடங்கும்.அரசியல் பூகம்பங்கள் வந்தாலும் எத்தனை மோடிகள் வந்தாலும் எத்தனை அண்ணாமலை வந்தாலும் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கும் தொண்டர்கள் திமுகவில் உள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் நடக்கும் சம்பவத்தை பார்க்கும்போது பாட்னா எதிர்க்கட்சி கூட்டத்தைக் கண்டு மோடி பயந்துவிட்டார் என்பது தெரிகிறது.
மகாராஷ்டிராவில் கேவலமான விளையாட்டை பாஜக விளையாடி வருகின்றனர் மோடியின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. மராட்டியம் சிவாஜி பிறந்த மண் கர்நாடகத்தில் பாஜக தோல்வியை தழுவிய போல் மராட்டிய மாநிலத்திலும் 2024 ல் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.
அஜித் பவர் போன்றோர் தமிழகத்தில் உள்ளனர் என அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை ஒரு பொருட்டே கிடையாது. அவரைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்.அண்ணாமலைக்கு தமிழக அரசியல் பற்றி என்ன தெரியும் நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் காமராஜர் குறித்தும் அண்ணாமலை பேசியுள்ளார்.குடியாத்தம் தேர்தல் முதல் காமராஜர் அடக்கம் வரை திமுக அனைத்து உதவிகளையும் காமராஜருக்கு செய்துள்ளது.
தமிழக ஆளுநர் தொடர்ந்து சனாதனம் குறித்து பேசி வருகிறார் என்ற கேள்விக்கு தமிழகம் பெரியார் பிறந்த மண் அண்ணாவால் வளர்ந்த மண் கலைஞரால் பாதுகாக்கப்பட்ட மண் இங்கு சனாதனத்திற்கு கடுகளவும் இடம் கிடையாது என அவர் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…