காசு வாங்காமல் ஓட்டு போட வேண்டும் எனும் நடிகர் விஜயின் கருத்து, தமது கருத்துடன் ஒத்துப்போவதாக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னைப் பொறுத்த வரை, சோதனை, கைது விஷயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. இதன் மூலமாக எந்த ஒரு ஆவணமும் கைப்பற்றி குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது. முழுக்க முழுக்க சிலர் ரசிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றுமில்லை.
2014ல் அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு 2023ல் தி.மு.க. ஆட்சியின்போது தலைமை செயலகத்தில் அமைச்சருடைய அலுவலகத்தை ஆய்வு செய்து அங்கிருந்து ஆவணத்தை கைப்பற்றி, கடந்த ஆட்சியில் நடந்த குற்றத்தை நிரூபிப்பதற்காக இப்பொழுது விசாரிக்கிறேன் என்று கூறுவது அபத்தமான விஷயம். அமலாக்கத்துறை என்ற ஒன்று இருக்கவே கூடாது. சிபிஐயில் உள்ள உட்பிரிவுடன் அதை இணைத்து விட வேண்டும்.
முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக, ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சியை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையே தவிர வேற எதுவும் இல்லை. கைது எல்லாம் நியாயமான விசாரணைக்கு தேவையே இல்லாத யுக்திகள். விஜய் அரசியலுக்கு வரப்போறாரா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், அவர் கூறிய அறிவுரை நல்ல அறிவுரை. பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும்.
நானும் அதையே கூறுகிறேன். காசு, பணம், துட்டுமணி, சம்திங் சம்திங் தான் தமிழ்நாட்டு அரசியல் மட்டுமே தென்னக அரசியலையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. காசு இல்லாத அரசியல் நடக்க வேண்டும் என்பதைதான் நானும் கூறுகிறேன். அதையேதான் விஜயும் கூறியிருக்கிறார் என்றால் என் கருத்துடன் அவர் ஒத்துபோகிறார் என்றுதான் அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…