நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்க நடிகர் விஜய் முடிவு செய்து, இதற்கான பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்தனர்.
இந்நிலையில் இந்த விழா இன்று நீலாங்கரை அடுத்த பனையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் மற்றும பாராட்டு சான்றிதழை வழங்கினார். இதைத்தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள், அடுத்த தலைவரை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள் என்றார்.
இந்நிலையில், நடிகர் விஜய் பேசியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நடிகர் விஜய் அவர்களின் கல்வித் தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருவதாக உள்ளது. இது மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுவும், திரு விஜய் அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூக நீதி தலைவர்களை படியுங்கள் என வழிக்காட்டியுள்ளது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…