ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் அந்த மாநிலத்தின் மொழியோடு, பண்பாட்டோடு, மக்களின் மனதோடு கலந்தவராக திகழ வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஒரு ஒலித்தட்டை வெளியிட்டு இருக்கிறார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நான், கவிஞர்கள் விவேகா, கபிலன், பா. விஜய் உள்ளிட்டோர் எழுதிய கவிதைகளை இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து, அதை ஒலித்தட்டாக இன்று முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இது ஒலிதட்டல்ல கல்வெட்டு.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புகழ் பாடுகிற பாடல்கள் மட்டுமல்ல. இளைஞர்களுக்கு எழுச்சி தருகிற பாடல்களாக இவை இருக்கும்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வரலாற்றை தமிழக அரசியல் வரலாறு , பண்பாட்டு வரலாறு என்று மட்டும் பார்ப்பதோடு புதிய தலைமுறைக்கு நம்பிக்கை தரும் வரலாறு என்று பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
கருணாநிதியின் வாழ்க்கையை இளைஞர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். அந்த கனவு இந்த பாடல் வரிகள் மூலம் நனவாகி இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட வேண்டும் என அவரது நூற்றாண்டு பொது கூட்டத்தில் தலைவர்கள் பேசியது கேள்விக்கு பதிலளித்த கவிஞர் வைரமுத்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுவதுதான் மிகச் சரியாக இருக்கும் என்று இதற்கு முன்பே நான் கூறியிருந்தேன். திருவாரூர் அவர் வளர்ந்த ஊர். திருக்குவளை அவர் பிறந்த ஊர். நான்கு வயதில் கொடி பிடித்து நெஞ்சிலே தமிழ் தாங்கி கையிலே மொழிதாங்கி அவர் நடந்து சென்ற ஊர்.
கமலாலய குளத்தை நீந்திக் கடந்த ஊர் திருவாரூர். அந்த திருவாரூரில் இருக்கிற மத்திய பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுவதுதான் சிறந்தது. என்ன செய்வது, ஆனால் அது மத்திய அரசின் கையில் இருக்கிறது. எந்த மாநிலத்திற்கு ஒருவர் ஆளுநராக வருகிறாரோ அவர் அந்த மண்ணின் பண்பாட்டோடு கலந்தவராக திகழ வேண்டும். அந்த மொழியோடு கலந்தவராக திகழ வேண்டும்.
அந்த நாட்டின் மக்களின் மனிதாபிமானத்தோடும் மனத்தோடும் கலந்தவராக ஒரு ஆளுநர் திகழ வேண்டும். அப்படி திகழ்வதற்கு நம்முடைய ஆளுநர் ரவி முயற்சி செய்வார் என்று நம்புகிறேன் என்றார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு "அரசியலுக்கு நான் வருவேனா என்று கேட்டால் பதில் சொல்ல முடியும். நடிகர்கள் வருவதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று வைரமுத்து பதிலளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கவிஞர், கைது என்பதற்கு அமலாக்கத் துறைக்கு உரிமை இருப்பதாகவும் அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இருக்கட்டும்.. உங்கள் அதிகாரப்படி கைது செய்து இருக்கிறீர்கள். உங்கள் உரிமை படி கைது செய்திருக்கிறீர்கள் என்பதெல்லாம் சரி. கைது செய்த முறை சரியா?
அவர் அமைச்சர் அல்லவா? தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி அல்லவா? செந்தில் பாலாஜி என்பவர் ஒரு தனி மனிதரா? இல்லை. தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஒரு கேபினட் அமைச்சராக இருக்கிற ஒருவர் தாக்கப்பட்டார், அவமதிக்கப்பட்டார் என்றால், அது சம்பந்தப்பட்ட நாட்டு மக்களின் மனதையும் அவர் தங்களின் பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார்கள் என்று பொருள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டப்படி இதை தமிழக அரசு சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை சட்டத்தின் மூலமாகவே எதிர்கொள்வார்கள். நீதி கிட்டும் என்று நம்புகிறேன் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…