மக்களின் பிரச்சினைகளுக்காக தாங்கள் குரல் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றும், அரசு பதில்சொல்லியே தீர வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதோடு வரலாற்றில் முதல் முறையாக 80 ரூபாயை இன்று கடந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி, காஸ் சிலிண்டர் விலை, பணவீக்கம், விலைவாசி என அனைத்தும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பாராளுமன்றம் கூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனைகள் குறித்து பேசி அமளியில் ஈடுபட்டன. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், ‛டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80 ஆகியுள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலையும் ரூ.1000 க்கும் மேல் உள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 1.3 கோடி பேருக்கு வேலை போய்விட்டது.
தற்போது உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி சுமத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் இதுபோன்ற பிரச்னைக்காக நாங்கள் குரல் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அரசு உரிய பதில் சொல்லியே தீர வேண்டும். பிரதமரே விவாதங்களையும், கேள்விகளையும் தவிர்ப்பதும் தான் பாராளுமன்ற விவாதமுறைக்கு எதிரானது.' எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…