ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் வரைவுத் தீர்மானத்தை இந்தியா ஏன் புறக்கணித்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மோடியை கிண்டலடித்த ஒவைசி, மோடி (சீன அதிபர்) ஜி ஜின்பிங்கை புண்படுத்த பயப்படுகிறாரா என்று கேட்டார்.
“முக்கியமான வாக்கெடுப்பில் இருந்து விலகியதன் மூலம், உய்குர் பிரச்சினையில் UNHRC இல் சீனாவுக்கு உதவ இந்தியா எடுத்த முடிவிற்கான காரணத்தை பிரதமர் மோடி சாஹேப் விளக்குவாரா? அவர் 18 முறை சந்தித்த ஜி ஜிங்பிங்கை புண்படுத்துவதற்கு அவர் பயப்படுகிறாரா, சரியானதை இந்தியா பேச முடியாது?" என ஒவைசி ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவும் இந்தியாவின் இந்த முடிவு குறித்து கடுமையாக விமர்சித்தார்.
“சீனாவில் உய்குர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதத்திற்கான UNHRC இல் வரைவுத் தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்கிறது. நமது நிலத்தை அபகரித்ததற்காக சீனாவை பொறுப்பேற்க வைப்பதற்கு மாறாக, மனித உரிமை மீறல்களில் சீனாவைக் கண்டிக்கக் கூட பிரதமர் மோடியால் முடியாது. மோடி ஏன் சீனாவை கண்டு பயப்படுகிறார்!" என அவர் ட்வீட் செய்துள்ளார்.
சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் மனித உரிமைகள் நிலை குறித்த விவாதம் கோரும் வரைவுத் தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருப்பதற்கான அதன் முடிவு குறித்து இந்திய அரசு தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த தீர்மானத்தை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தாலும், தீர்மானம் இறுதியில் தோல்வியைத் தழுவியது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இதுபோன்ற நாடு சார்ந்த தீர்மானங்களுக்கு வாக்களிக்காமல் இருப்பதை இந்தியா பாரம்பரியமாக கொண்டுள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் இந்தோனேசியா வரை பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளே வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…