அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய ஏதுவாக தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று பாமக கௌரவ தலைவர் ஜி கே. மணி சேலத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அந்த கட்சியின் கௌரவ தலைவர்
ஜிகே . மணி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி, தமிழகத்தில் தற்பொழுது நல்ல மழை பெய்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் , ஆனால் பெய்த மழை நீரை சேமிக்க வழி இன்றி கடலில் சென்று கலப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை முறையாக சேமித்து வைத்தால் மட்டுமே வறட்சி காலத்தை சமாளிக்க முடியும் என்று தெரிவித்த அவர், மாநில அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் பெரும் பாசன திட்ட குழு உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தமிழகத்தின் உரிமையை தட்டிப்பறிக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டிய ஜிகே. மணி , காவிரியில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்றும் தென்பெண்ணை பாலாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கான இழப்பீடு நிதியை மத்திய அரசு கூடிதலாக உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிர்வாக வசதிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தமிழகத்தில் உள்ள சேலம் , மதுரை , திருச்சி, கோவை , தஞ்சை போன்ற பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்றும் அப்படி பிரித்தால் தான் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என்றும் ஜி கே மணி வலியுறுத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…