சவுக்கு சங்கருக்கு எதிராக செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், இனி ட்வீட் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரபல பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருக்கும் சவுக்கு சங்கர் பல்வேறு ஊடகங்கள், யூடியூப் பேட்டிகளில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை முன் வைக்கிறார். இதில் பெரும்பாலானவை சர்ச்சையான கருத்துகளாகவே இருந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில் பாலாஜி ஆகியோரை கடுமையாக விமர்சித்து தனது கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அதேபோல மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்த வழக்கில் சுமார் 4 மாதங்கள் வரை சிறையில் இருந்தார். மேலும் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிதான் அடுத்த முதலமைச்சர், திமுகவை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். மஹாராஷ்டிரவில் ஷிண்டே போல் தமிழகத்தில் செந்தில் பாலாஜி என கூறியிருந்தார். மேலும் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாகவும், பணி நியமன ஆணைக்கு பல லட்சம் வசூலிப்பதாகவும் கூறியிருந்தார்.
கரூரில் பல கோடி மதிப்பிலான வீடு கட்டுவதாகவும் சவுக்கு சங்கர் பல்வேறு சமூக வலை தளத்தில் பேட்டி கொடுத்தார், டுவிட்டர் மூலமாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த மாதம் சவுக்கு சங்கருக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சவுக்கு சங்கர் பேசி வருவதாக குற்றம்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக தனது மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இனி ட்வீட் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…