நெல்லை ராதாபுரம் பகுதி பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு இன்று முதல் வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாசனத்திற்கு அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயில் இருந்து 150 கன அடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தனது அமைச்சரவையில் யார்-யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சருக்குதான் உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.
முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என்று குறிப்பிடப்படவில்லை. தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது. இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…