தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் என சந்தேகப்படுவதால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய பொன்முடி, "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்கும் என அறிவிப்பு வெளியானது. இதில் சிறப்பு விருந்திரனாக யாரை போடலாம் என இணைவேந்தர் என்ற முறையில் என்னிடமும் செயலரிடமும் ஆலோசனை நடத்த வேண்டும்.
ஆனால் எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமலே அறிவிப்பு வருகிறது. துணை வேந்தரை கேட்டால் அவர், தனக்கு எதுவும் தெரியாது, எல்லா உத்தரவுகளை கவர்னர் அலுவலகத்தில் இருந்து வருகிறது என்கிறார். கவர்னர் அலுவலகத்தில் இருந்து ஒரு அலுவலராவது எங்களிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவரை தலைமை விருந்தினர் என போட்டு பேசுவது உண்டு. ஆனால் கவுரவ விருந்தினர் என யாரையும் அழைப்பது கிடையாது. டாக்டர் பட்டம் அளிப்பவர்கள் மட்டுமே கவுரவ விருந்தினராக அழைக்கப்படுவர். ஆனால் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு கவுரவ விருந்தினர் என ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், கவுரவ விருந்தினர் என ஒருவரை போட்டு, அதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை அழைத்துள்ளனர். அவர் மத்திய கல்வி அமைச்சர் கூட இல்லை. ஒரு துணை அமைச்சர் மட்டுமே. பட்டமளிப்பு விழாவில் கவர்னருக்கு அடுத்து கவுரவ விருந்தினரை போட வேண்டிய அவசியமே கிடையாது. அப்படி போடும் கவர்னரின் நோக்கம் என்ன?
இதனால் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலை புகுத்துகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து கவர்னர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார் அப்படித் தான் செய்வோம் என கூறுகின்றனர். இதனால் அரசியலை புகுத்தும் செயலில் கவர்னர் ஈடுபடுகிறார் என்ற சந்தேகம் வருவதால், இணை வேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க நான் முடிவு செய்துள்ளேன்
மேலும் கவர்னர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. அவர் மத்திய அரசால் நியமிக்கப்படுவர் மட்டுமே. இதனால் அவர் மத்திய ஆட்சிக்கு, மற்றும் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதல்ல. மாநில அரசிற்கும், மாநில முதல்வருக்கும் உடன்படுவதுதான் அவரது கடமையாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்த்து பேசுவது தவறான செயல்.
மாநில அரசு தனியாக ஒரு கல்வி கொள்கை உருவாக்க குழு அமைத்தது தெரிந்தும், மத்திய கல்வி கொள்கை பற்றி பேசுவதற்கு யார் இவருக்கு அதிகாரங்களை கொடுத்தார் என்பது தெரியவில்லை. கவர்னராக இருப்பதை விட, ஆவர் பாஜகவிற்கு பிரசாரம் செய்பவராக இருந்து வருகிறார்." எனக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…