திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், திமுகவின் போர்க்குணம் குறைந்து விடவில்லை. அது என்றைக்கும் குறையாது. தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ அல்லது மத்திய அரசால் பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ திமுகவின் போர்க்குணம் வெளிவரும் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போன்றோர் நூலை வெளியிட்டனர். மேலும், இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, நக்கீரன் கோபால், மற்றும் திரைப்பட இயக்குநர் கரு பழனியப்பன் போன்றோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “பெரியார், அண்ணா, கலைஞர் மாடல்களின் கலவையாகவே, தற்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியை கொடுத்து வருகிறார். இதற்கு கருணாநிதியை விட மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என எதிர்க்கட்சியைச் சேர்ந்த பா.ஜ.கவினரே ஒப்புதல் கொடுத்து விட்டனர்”. என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றும் இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த விழாவில் பேசிய இவர், “தற்போது மு.க.ஸ்டாலின் அறிவித்த நலத்திட்டங்களும், நடத்தி வரும் நல்லாட்சியையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, அனைவருக்கும் உதவ வேண்டும்” என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…