தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டமும், வேலூரில் நடத்திய பாஜக பொதுக்கூட்டமும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. முதலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 25 நாடாளுமன்ற தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று கட்சியினருக்கு கட்டளையிட்டதாக தகவல் வெளியானது. பின்னர், பாஜக 25 சீட்டுகளை வெல்ல வேண்டும் என்று அமித்ஷா சொன்னதாக பரவியதால், அதிமுக கூட்டணிக்குள் இப்பிரச்சினை சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக மூத்த தலைவர் செம்மலை தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் சீட்டு ஒன்றா இரண்டா என்ற ரேஞ்சில் பேட்டி அளித்தார். இந்த பரபரப்பு குறையும் முன்னரே அமைச்சர் அமித்ஷா, தமிழர் ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு இரு முறை தவறிப்போனதாகவும், எதிர்காலத்தில் தமிழர் ஒருவரை பிரதமராக்க பாஜக முயற்சிக்கும் என்றும் கொளுத்திப்போட்டார். இது, அரசியல் களத்தில் இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒன்று தமிழர் பிரதமராகும் வாய்ப்பை காங்கிரஸ் தடுத்தது என்ற விமர்சனம். மற்றொன்று, அமித்ஷா தமிழ் பிரதமர் என்று பேசுவதால் வரும் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இல்லையா என்பது தான். இது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்கள் மற்றும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இது குறித்து பாஜகவின் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். பாஜக வின் பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையா என்னும் கேள்வியே அபத்தமானது என்று கூறியுள்ள அவர், எதிர்காலத்தில், பாஜக கட்சியில், தமிழகத்தை சேர்ந்தவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க கட்சி உதவும் என்றும் கூறியுள்ளார். இப்போதைக்கு இவரா, அவரா என்று சொல்லமுடியாது எனக் கூறியுள்ள வானதி சீனிவாசன், திமுக, காங்கிரசில் இந்த வாய்ப்பு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும் என்றும், ஆனால், பாஜக ஜனநாயக ரீதியில் செயல்படும் கட்சி என்றும் தெரிவித்துள்ளார். எது எப்படியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை, நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பை அரசியல் களத்தில் உருவாக்கி இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…