சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் பத்தாம் ஆண்டு வீதி விருது விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வீதி விருது விழா குழுவினர் சார்பில் ரூபாய் 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.
அதில் 350 க்கும் மேற்பட்ட கூத்து கட்டிய தர்மபுரி மாவட்ட பெருங்கூத்து கலைஞர் கந்தசாமிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய திருமா, அழிந்த கலைகளை மீட்க ,நலிந்த கலைஞர்களை கௌரவிக்க கொண்டாடப்படும் விழா.வீதியில் இருப்பவர்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக வீதியின் பெயரில் விருது வழங்கப்படுகிறது. வீதி எனும் பெயரால் விருது வழங்குகிற இந்த சிந்தனையே போற்றுதலுக்குறியது.வீதி என்கிற சொல் ஏராளமான பொருளை நமக்கு தருகிறது. இந்த மக்கள் வீதியில் இருக்கிறார்கள்.
இந்த கலை வீதியில் இருக்கிறது வீதியில் நாங்கள் இருக்கிறோம் களமாட என்ற பல பொருளைத்தருகிறது. இந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் பத்தாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை இல்லை என்றாலும் 100 பேருக்கு தலா 10 ஆயிரம் பகிர்ந்து வழங்குவதே ஒரு பகுத்தறிவு கொண்ட பார்வை தான். இந்த கலைஞர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் மதசார்பற்றவர்கள் சாதி சார்பற்றவர்கள்.கலைஞர்களின் குரல் கோரிக்கைகளுக்கான குரல் ஆதிக்கத்திற்கான குரல் அல்ல. நம் உரிமைகளை, வாழ்வாதாரத்தை மீட்பதற்கான குரல்.
நாடு வளர்ச்சி பெறுகிறது என்பது ஆதிக்கம் செலுத்துபவர்களின் வளர்ச்சி மட்டுமல்ல, எளிய மக்களின் வளர்ச்சியும் சேர்ந்ததுதான்.வஞ்சிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு தான் நாட்டின் வளர்ச்சி நாம் குறிப்பிட்ட ஒரு சாதிக்கு எதிராகவோ மதத்திற்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ காழ்ப்புணர்ச்சி கொண்டு வெறுப்பை உமிழவில்லை. வெறுப்பை திட்டமிட்டு திணிப்பவர்களை கருத்தியலால் எதிர்கொள்கிறோம்.
குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலக்கிறான் என்றால் இது என்ன உளவியல்? எவ்வளவு தரம் தாழ்ந்த உளவியல் இது தனிமனித உளவியலாக இல்லாமல் ஒரு சமூக உளவியலாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அக்ரஹாரத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இப்படி மலம் கலந்து இருக்கிறது என்று இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது, எப்போதாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா? .
இப்படி எளிய மக்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தும் ஒரு உளவியல் தான் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது சனாதனத்தின் வளர்ச்சி. இதை தகர்க்கின்ற அரசியல் தான் திராவிட அரசியல். இந்த திராவிட அரசியலை அம்பேத்கர் இயக்கங்களும் பேசலாம் கம்யூனிஸ்டுகளும் பேசலாம். சனாதன எதிர்பாளர்கள் அனைவரும் திராவிட அரசியலை பேசலாம்.
அவர்கள் பேசுவது இந்துத்துவம் நாம் பேசுவது சமத்துவம் இதுதான் திராவிடம்.திமுக எதிர்ப்பு என்பது வேறு திராவிட கருத்தியல் எதிர்ப்பு என்பது வேறு. திமுகவை எதிர்க்கின்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்தால் அது அறியாமை, முட்டாள்தனம். திராவிடம் என்பது எளியோருக்கானது இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கானது. திராவிட அரசியலை பேசுவது திமுகவை காப்பாற்ற அல்ல சமத்துவத்தை பாதுகாப்பதற்காக.
தெருக்கூத்து கலைஞருக்கு கலைமாமணி விருது வழங்க உதவிட வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர்.இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. நிச்சயமாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என உறுதி அளிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…