அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒற்றைத் தலைமையை ஏற்காதவர்கள் அனைவரும் திமுகவின் பி டீம் என அதிமுக நிர்வாகி தெரிவித்த கருத்து ஓபிஎஸ் கூடாரத்தில் புகைச்சலை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
அதிமுகவில் தற்போதுள்ள இரட்டைத் தலைமையால் எந்த முடிவும் உடனடியாக எடுக்கமுடியவில்லை என்றும், கட்சிக்குள் கோஷ்டிகள் அதிகரித்து வருவதாகவும், இது கட்சிக்கு நல்லதில்லை மற்றும் திமுகவை எதிர்க்க வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஒற்றைத் தலைமை என வரும்போது, 4 வருடம் முதல்வராக பதவி வகுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமியே பலரின் சாய்ஸாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, அது நடந்தால், கட்சிக்குள் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி கிழக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் அதிமுக சார்பில் ராஜ்யசபா பதவிக்கு இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டிய நிலை சமீபத்தில் ஏற்பட்டபோது பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகே மிகவும் தாமதமாக இருவர் தேர்வு செய்யப் பட்டனர்.
இது முழுக்க முழுக்க இரட்டை தலைமையால் தான் ஏற்பட்டது. அதனால் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்கிறோம். இதுமட்டுமல்ல அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி என்பவர் ஓபிஎஸ் வீட்டில் அமர்ந்துகொண்டு இபிஎஸ் பற்றி தவறாக பேசி வருகிறார். இது நல்லதல்ல.
பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற முயற்சிக்கும் எல்லோரும் கட்சிக்கு எதிரானவர்கள் தான். அவர்களை கட்சியில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதா வகித்த பதவி என்பதால் அதில் யாரும் அமரக்கூடாது என்பது கேலிக்கூத்தான வாதம்.
தமிழக முதல்வர் பதவியிலும் கூடத்தான் அவர் இருந்துள்ளார். அதற்காக தமிழக முதல்வர் பதவியை அதிமுகவில் யாரும் வகிக்கக் கூடாது எனச் சொன்னால் நியாயமாக இருக்குமா? அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் பதவி மிகமிக அவசியமானது.
திமுக,வை எதிர்க்க கூடிய வலுவான தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் அமர வேண்டும். அந்த பதவிக்கு தகுதியானர் இபிஎஸ் மட்டுமே. ஒற்றை தலைமையை ஏற்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அ.தி.மு.க.,விற்கு எதிரானவர்கள் மற்றும் அவர்கள் அனைவரும் திமுக வின் பி டீம்." எனக் கூறினார்.
அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒற்றைத் தலைமைக்கு எதிராக உள்ள ஓபிஎஸ் தரப்பை மேலும் சூடேற்றும் வகையில் கட்சி நிர்வாகி பேசியிருப்பது ஓபிஎஸ் முகாமில் கொதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…