ஈரோட்டில் ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை நடத்தி வரக்கூடிய கே.எஸ்.தென்னரசு கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். 1992 ஆம் ஆண்டு ஈரோடு நகர இணைச் செயலாளராக அதிமுகவில் முதல் பொறுப்பு வகித்த தென்னரசு 1995 ஆம் ஆண்டு ஈரோடு நகர அதிமுக செயலாளரானார். அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராகவும் ஒரு காலத்தில் வலம் வந்தார். 1999 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரான இவர், 2001 ஆம் ஆண்டு முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு மீண்டும் ஈரோடு மாநகர அதிமுக செயலாளர், ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட தலைவர் பொறுப்புகளை வகித்தார்.
இதற்கிடையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி பொறுப்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டார். மீண்டும் 2016 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வருவதால் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளையும் கே.எஸ்.தென்னரசு வழங்கி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், இவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசுவை அக்கட்சியின் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…