சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உள்ளிட்ட 3 மனுக்கள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அப்போது, 18 மணி நேர சோதனை மற்றும் விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையால், உடல்நலக்குறைவு ஏற்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேற்று மாலை உத்தரவிட்டார்.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், இதய சிகிச்சைக்காக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் விசாரணை அதிகாரியான துணை இயக்குநர் கார்த்திக் தேசாரியும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த 3 மனுக்களும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வருகிறது. அதன்படி, முதலில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான அமலாக்கத் துறையின் மனுமீது இன்று காலை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. அதன் பிறகே, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரும் மனு உள்ளிட்ட பிற மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…